Monday, October 1, 2012

சிவாஜி கணேசன்


சிவாஜி கணேசன்

உலகளாவிய கலைத்துறையில் ஒரு திருப்புமுனை. 1927 ம் ஆண்டு  ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலகக்கலை உலகத்திற்கு கடவுள் தந்த வரப்பிரசாத புருசர்.   நடிப்பு எனும் சொல்லுக்கு இவரின்; பெயர் பொருந்தும். உலகில் ஈடு இணையற்ற சொற்ப நடிகர்களில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. காலத்தால் அழிக்க முடியாத நடிப்பின் எல்லா எல்லைகளையும் தொட்ட பிதாமகன் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். இவரைப்பற்றி சொல்வதென்றால் சூரியன் ஒளிமிக்கதென்று விளக்குவது போன்ற செயல்தான் அவரின் நடிப்புத்திறனை சொல்லிப்புரிய வைக்கும் அளவிற்கு  அவர் சாதாரணம் அல்ல. கலையுலகின் சிகரம். கடந்த 1927 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, இந்தியாவின் தமிழ்நாட்டில் சீர்காழி எனுமிடத்தில், இராஜாமணியம்மாள், சின்னையா மன்றாயர் தம்பதியினருக்கு அரும்தவப்புதல்வராக தமிழுக்கு பெருமை சேர்க்க பிறந்தார் சிவாஜி கணேசன்.  இவரது இயற்பெயர் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பதாகும்.  சிறுவயதிலிருந்தே கல்வியில் நாட்டம் கொள்ளாத நடிகர் திலகம் சிவாஜி, நாடகம் ,பஜனை என்பவற்றை ரசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டார். எங்குசென்றாலும் பார்க்கும் நாடகங்களின் கதாபாத்திpரங்களை அப்படியே தனக்குள் அச்சிட்டுக்கொள்ளும் திறன் படைத்திருந்தார் சிவாஜி கணேசன். அதற்கமைய கடந்த 1935 ம் ஆண்டு தனது 7 ஆவது வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகர் திலகம், 17 ஆண்டுகளாக நாடகத்துறையில் தன்னை செம்மை செய்தார். அவர் முதன்முதலில் நடித்த நாடகம் ராமாயணம். அதில் சீதாப்பிராட்டியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் சிவாஜி கணேசன்.  இந்நிலையில் கடந்த 1945 ம் ஆண்டு, சிவாஜி கணேசன் , தந்தை பெரியார் முன்னிலையில் பேரரிஞர் அன்னா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் எனும் நாடகத்தில் சிவாஜி வேடத்தில் நடித்தார். அவருடைய சிறப்பான நடிப்பை பாராட்டி, தந்தை பெரியார் அவருக்கு அன்றைய நாளிலிருந்து  வீ சீ கணேசன் என்ற பெயரை மாற்றி,  சிவாஜி கணேசன் எனும் பெயரை சூட்டினார். அன்றிலிருந்து அனைவராலும் சிவாஜி கணேசன் என நடிகர் திலகம் அழைக்கப்பட்டார்.  இவ்வாறு தொடர்ச்சியாக நாடகங்களில் நடித்துவந்த  கலையுலகின் தத்துப்பிள்ளை சிவாஜி கணேசன், கடந்த 1951 ம் ஆண்டு திரையுலகில் கால்தடம் பதித்தார். அதற்கமைய கருணாநிதி கதைவசனம் எழுதிய பராசக்தி எனும் திரைப்படத்தின் மூலம் ,  பிரபஞ்சத்தின் நடிப்புத்துறையினை தன்னகமாக்க சிவாஜி தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார்.  முதல்படத்திலேயே , கதாநாயகன் அந்தஸ்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பேசிய முதல் வார்த்தை சக்சஸ் என்பதாகும். அந்த வார்த்தையே அவர் திரையுலகில் பல சாதனைகளை பெறுவதற்கு வழிவகுத்தது. அதற்கமைய கடந்த 1952 ம் ஆண்டு முதல், 1997 ம் ஆண்டு வரை 45 வருடங்களில் ,  சிவாஜி கணேசன் 301 திரைப்படங்களில் நடித்தார். அதில் 270 தமிழ் திரைப்படங்களும், 8 தெழுங்கு திரைப்படங்களும், 2 ஹிந்தி திரைப்படங்களும், ஒரு மலையாள திரைப்படமும் உள்ளடங்கும். மேலும் கௌரவ வேடங்களில் 19 திரைப்படங்களில் 5 மொழிகளில் நடித்துள்ளார். தற்போதைய தமிழ் திரையுலக ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர்  இணைந்து நடிப்பார்களா என கேள்வி எழும்பியுள்ள நிலையில் அன்றைய காலகட்டத்திலேயே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உடன் இணைந்த கூண்டுக்கிளி எனும் திரைப்படத்தில் நடித்து முன்மாதிரியாக திகழ்ந்தார் நடிகர் திலகம். தான் நடிக்கின்ற ஒவ்வொரு கதாபத்திரத்திலும்  தான் சிவாஜி கணேசன் என்பதை மறைத்து,  தான் அந்த கதாபாத்திரமாக மாறும் தன்மை படைத்தவர்.  நடிப்பின் அத்தனை எல்லைகளையும் தொட்டு, உலக மக்கள் அனைவரினதும் மனதை தொட்டவர் சிவாஜி கணேசன். அவர் நடித்ததில் ,  இந்தப்படங்கள் தான் சிறந்தவை என்று சொல்லும் அளவிற்கு எந்த படமும் சிறப்பற்றவையல்ல. அவர் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் , ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களின் மனதை தொட்டது.  திரைப்படங்களில் ரசிகர்களால் சிவாஜியை பார்ப்பது கடினம். காரணம் தன்னை கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டு,  தன்னுடைய ஒவ்வொரு உடல் அசைவிலும் திரைக்கதையினை சொல்லக்கூடிய  ஒப்பற்ற சரித்திரம் சிவாஜியாகும். அவர் தமிழ் மொழியில் மாத்திரமின்றி, ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெழுங்கு என பல மொழிகளில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு அசைவிலும் நடிப்புக்கான இலக்கணத்தை வகுத்துத்தந்த நிறைகுடம் சிவாஜி கணேசன். பழைய இயக்குனர்களிலிருந்து இன்று திரையுலகில் சாதனை படைத்துவரும் இயக்குனர்கள் வரை அனைவரினதும் இயக்கததில் நடித்த பெருமைக்குரியவர் சிவாஜி கணேசன். அவர் தனது வாழ்நாளில் நடித்த திரைப்படங்களில் அதிகளவான திரைப்படங்களை இயக்கியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் ஏ பீம் சிங் மற்றும் ஏ சி திருலோகசுந்தர் ஆகியோர்.   அவர்கள் 18 திரைப்படங்களில் நடிகர் திலகத்தையே இயக்கியுள்ளனர். சிவாஜியுடன் அதிக திரைப்படங்களில் ஜோடியாக நடித்த பெருமைக்குரியவர் நடிகை பத்மினி. அவர் 29 திரைப்படங்களில் சிவாஜியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.  நடிப்பில் மாத்திரமின்றி தனது இயல்பு வாழ்க்கையிலும் தனிப்பண்பினை பேணிய சிவாஜி,  அனைவராலும் மதிக்கப்பட்டவர். நடிப்புலகின் சிகரமாக திகழ்ந்த போதிலும் ,அழைப்பதற்கு  ஒரு மணிநேரத்திற்கு முன்பே ஒளிப்பதிவு இடங்களுக்கு செல்லும் எளிமையான பண்பு கொண்டவர்.  அவர் கடந்த 1952 ம் ஆண்டு, கமலா அம்மையாரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு பிரபு, ராம்குமார் மற்றும் சாந்தி , தேன்மொழி எனும் பிள்ளைகள் உள்ளனர்.  இவர்களில் தனது இளையமகனான பிரபுவை திரையுலக வாழ்க்கைக்கென தனது வாரிசாக சிவாஜி தத்துக்கொடுத்தாலும்,  கலைத்திறமையின் அடிப்படையில் உலக நாயகன் கமலஹாசனையே தனது வாரிசாக ஏற்றுக்கொண்ட, நேர்மைக்கு சான்றாக அமைந்த மாமனிதன். தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அன்றைய காலப்பகுதியில் ஒவ்வொரு கட்டத்திற்கும், தன்னை மாற்றியமைத்து, காட்சிக்கு காட்சி, தன்னை வித்தியாசப்படுத்தி காட்டிய சிவாஜி கணேசனின் அந்த செயல் இன்னும் வியப்புக்குள்ளானதாகவே உள்ளது.  சுமார் 8 வருடங்கள் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக சிவாஜி கணேசன், பணியாற்றினார்.  இவ்வாறு திரையுலகில் தன்னிகரற்ற மாமன்னராக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அரசியலிலும் கால்தடம் பதித்தார்.  கடந்த 1955 ம் ஆண்டு முதல் , திராவிட அரசியலில் ஈடுபட்ட சிவாஜி, 1961 ம் ஆண்டு முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயற்பட்டார். கடந்த 1982 ம் ஆண்டில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக சிவாஜி கணேசன் தெரிவுசெய்யப்பட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையடுத்து, கடந்த 1987 ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி எனும் புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார்.  ஆனால் திரையுலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசனால் அரசியல் உலகில் தன்னை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு மாபெரும் கலைஞனாகவும், தன்னிகரற்ற சிகரமாகவும் பார்க்கப்பட்ட சிவாஜியை ,  ஒரு அரசியல் வாதியாக பார்ப்பதற்கு மக்கள் விரும்பவில்லையென்பதை அவர் புரிந்துகொண்டார்.  திரையுலகில் அவருக்கு கணக்கில் கொள்ளமுடியாத அளவிற்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தாலும், கலையுலகம் திரையுலகிற்கு தந்த மிகப்பெரிய விருது சிவாஜி கணேசன். அதற்கமைய அவருக்கு கடந்த 1960 ம் ஆண்டு ஆபிரிக்க ஆசிய திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.  கடந்த 1962 , 63 ம் ஆண்டு காலப்ப

குதியில் தமிpழ்நாடு அரசின் கலைமாமனி விருதும், கடந்த 1966 ம் ஆண்டு, பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  கடந்த 1984 ம் ஆண்டு, சிவாஜி கணேசனுக்கு,  இந்திய மத்திய அரசால் பத்மப+ஷனன் விருது வழங்கப்பட்டது.  மேலும் கடந்த 1994 ம்  , அவருக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருதுவழங்கி சிவாஜிகணேசன் கௌரவிக்கப்பட்டார். அன்றிலிருந்து அவர் செவாலியே சிவாஜி கணேசன் எனவும் அழைக்கப்பட்டார்.   மேலும் 1986 ம் ஆண்டு,  அன்னா பல்கலைக்கழகத்தினால் டாக்டர் பட்டம் வழங்கி சிவாஜி கௌரவிக்கப்பட்டார். மேலும் கடந்த 1997 ம் ஆண்டு,  சிவாஜி கணேசனுக்கு இந்திய மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  குறித்த விருதினை பெற்ற ஒருயொரு தமிழர் என்ற பெருமை நடிகர் திலகத்தையே சாரும். இந்நிலையில் அவருக்கு கடந்த 1994 ம் ஆண்டு நடிகர் சங்க கலைச்செல்வம் விருதும் வழங்கப்பட்டது. இதனிடையே கடந்த 1962 ம் ஆண்டு, அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிவாஜி கணேசன் அந்நாட்டின் நயகரா மாநகரின் ஒருநாள் நகரதந்தையாக அங்கீகரிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டமை அவரின் கலையுலக வெளிப்பாடு உலகளாவிய ரீதியில் வியாபித்திருப்பதை எடுத்துக்காட்டியது. மேலும் சிவாஜி கணேசன் இலங்கையின் முன்னணி நடிகைகளான மாலினி பொன்சேகா சீதா குமாரசுவாமி ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு வருகை தந்த சிவாஜி கணேசனுக்கு அவரது கலைத்திறமையினை பாராட்டி இலங்கையில் வள்ளிபுரத்தான் 150 பவுண் கீரீடம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பராசக்தியில் தனது திரையுலக வாழ்க்கை ஆரம்பத்திருந்தாலும், பிறப்பிலிருந்தே தன்னை  கலையுலகிற்கு தத்துக்கொடுத்தவர் சிவாஜி கணேசனாவார். அதற்கமைய மாபெரும் நடிகர் சிகரம் ஈடு இணையற்ற நடிப்புலகின் மாமன்னர் நடித்த இறுதி திரைப்படம்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 1999 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ம் திகதி வெளிவந்த படையப்பா திரைப்படமாகும். திரையுலகில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத பல சாதனைகளை புரிந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எனும் சகாப்தம் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 21 ஆம் திகதி சென்னையில் கலையுலகை அநாதையாக்கி உயிர்நீத்தது. அவர் ஒரு சரித்திரம்  வாழும் வரலாறு சிவாஜி எனும் பெயருக்கான உருவம் மறைந்தாலும் அவரின் உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் என்பன சிவாஜியின் திரைப்படங்களில் உயிரோட்டமாய்  இன்றும் எம்மோடு வாழ்ந்துகொண்டே இருக்கிறார். ஒவ்வொரு திரையுலக  ரசிகனதும் கலை ரசிகனதும் மனதில் முதல் நாயகனாக என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். .............................பிரசன்னா
























No comments:

Post a Comment

hi